Palani Murugan: பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) முதல் 20-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. இதில், கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு வடம் பிடித்து தங்கரதத்தை இழுத்தனர்.
முன்னதாக சாயரட்சை பூஜைக்கு பிறகு தங்க மயில் வாகனத்தில் சின்னகுமாரர் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.
தினந்தோறும் முருகப்பெருமான் வெள்ளிக்காமதேனு, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் நடத்தப்பட்டு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன் பின் மணக்கோலத்தில் சுவாமி வெள்ளத்தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையும் படிங்க: gold and silver price : உயர்வில் தங்கத்தின் விலை
நாளை பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் சுவாமி அருள்பாலித்தல், பகல் 12.45 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டத்தில் பக்தர்கள் முழுவதுமாக பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அடிப்படை வசதிகளையும் சுகாதார வசதிகளையும் நிறைவேற்றித் தர அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. 6 ஏ.டி.எஸ்.பி.க்கள், 12 டி.எஸ்.பி.க்கள் மற்றும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு ஊர்களில் இருந்து தற்போது பழனி நோக்கி பக்தர்கள் கூட்டம் வரத் தொடங்கியுள்ளதால் நகரமே விழாக்காலம் பூண்டுள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் இன்று முதல் வருகிற 20ந் தேதி வரை 4 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று இரவு நடந்த தங்கரத புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட எஸ்.பி. சீனிவாசன், கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் உள்பட பலர் தங்க ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர்.
இதையும் படிங்க: Earthquake in Japan : ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்