காஷ்மீரின் கலப்பு கலாசாரத்தை உடைக்க பா.ஜ., முயற்சி- ராகுல்

காஷ்மீரின் கலப்பு கலாசாரத்தை உடைக்க பா.ஜ., முயற்சி செய்வதாக காங்., எம்.பி., ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ள ராகுல், ஜம்முவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது: காஷ்மீர் வருவது எனக்கு சொந்த வீட்டிற்கு வருவது போல் உள்ளது. எனது குடும்பத்திற்கும், காஷ்மீருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.உங்கள் மத்தியில், அன்பு, சகோதரத்துவம், கலப்பு கலாசாரம் நிலவி வருகிறது.

இந்த கலாசாரத்தை உடைக்க வேண்டும் என பா.ஜ.,வும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நினைக்கின்றன.

உங்கள் அன்பு மற்றும் சகோதரத்துவம் மீது தாக்குதல் நடத்துகின்றன. நீங்கள் பலவீனமடைந்ததன் காரணமாக மாநில உரிமையை மத்திய அரசு பறித்து கொண்டது. காஷ்மீர் மாநில உரிமையை வழங்க வேண்டும்.

நேற்று மாதா வைஷ்ணவ் தேவி கோயிலுக்கு சென்றேன். அங்கு மாதா துர்கா, மாதா லட்சுமி, மாதா சரஸ்வதி உள்ளனர். கடவுள் துர்கா நம்மை காக்கிறார். லட்சுமி, வலிமை, சக்தியின் சின்னமாகவும், சரஸ்வதி கல்வி மற்றும் அறிவின் அடையாளமாக திகழ்கின்றனர். இந்த மூன்று சக்திகளும் ஒன்று சேரும் போது, உங்கள் வீடும் நாடும் வளர்ச்சி பெறும். ஆனால், பாஜ., அரசின் கொள்கைகளான ஜிஎஸ்டி, ரூபாய் நோட்டு வாபஸ் ஆகியவை மூலம் நாட்டின் வலிமை பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.