பிரதமரின் கண்ணீர் உறவினர்களை இழந்தோரின் கண்ணீரை துடைக்காது- ராகுல் காந்தி

3வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

கோவிட் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதாவது: அரசை குறை சொல்வதற்காக இந்த வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை.

கோவிட் 3வது அலையை எதிர்கொள்ள நாட்டிற்கு உதவுவதற்காகவே, வெளியிடப்பட்டு உள்ளது. 3வது அலை வரும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். மோசமான நிர்வாகத்தால்,முதல் மற்றும் இரண்டாவது அலையில் பேரழிவு ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். இதற்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டும். வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைவதால், 3வது அலையை தொடர்ந்து மேலும் பல அலைகள் வரும் என நான் கூறுகிறேன்.

இந்த நேரத்தில் தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம். தடுப்பூசி போடும் திட்டத்தை வேகப்படுத்துவதுடன், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். 3வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக வேண்டும். மருத்துவமனைகள், ஆக்சிஜன் படுக்கைகளை தயார்படுத்த வேண்டும். இரண்டாவது அலையின்போது, பலர் உதவி கிடைக்காமல் உயிரிழந்தனர்.

அவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை நாம் பூர்த்தி செய்ய முடியவில்லை. பிரதமரின் கண்ணீர்,, கோவிட்டால் உறவினர்களை இழந்தோரின் கண்ணீரை துடைக்காது. அவுர்களை காப்பாற்றாது. ஆனால், பிரதமர் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தாமல், மே.வங்க தேர்தலில் கவனம் செலுத்தினார். இவ்வாறு அவர் கூறினார்.