Mahashivratri: மகாசிவராத்திரி நாளில் இதை செய்தால் பாவம் சேரும்

mahasivarathiri-viratham-do-s-and-dont-s-important-and-benefits
மகாசிவராத்திரி

Mahashivratri: விரதம் இருப்பது என்பது நம் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவதற்காக நம் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்துச் சென்றுள்ள வழிமுறை ஆகும். இந்துக்களின் விரத தினங்களில் பல வகைகள் இருந்தாலும், குறிப்பாக வைணவ பக்தர்களின் வைகுண்ட ஏகாதாசி விரதமும், சைவ பக்தர்களின் மகாசிவராத்திரி விரதமும் முக்கியமான தினங்களாகும்.

நாடு முழுவதும் மகாசிவராத்திரி வரும் மார்ச் 1ஆம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி தினத்தில் எதை நாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

வைணவ பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று எப்படி உபவாசம் இருந்து துவாதசி தினத்தில் விரதத்தை முடிக்கின்றார்களோ, அது மாதிரியே சைவ பக்தர்கள் மஹாசிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் குளித்து முடித்து, விரதத்தை தொடங்கி. அன்று முழுவதும் சிறிதும் உறங்காமல் அருகிலுள்ள சிவன் கோயில்களுக்குச் சென்று அங்கு நடக்கும் நான்கு கால அபிஷேகங்களையும் கண்டு தரிசித்து, மறுநாள் அதிகாலையில் சிவாலயங்களில் அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் தன்னுடைய விரதத்தை முடிப்பதையே வழக்கமாக கொள்வார்கள். இது தான் பெரும்பாலான பக்தர்கள் தீவிரமாகக் கடைபிடிக்கும் விரதமுறை ஆகும்.

ஆனால், இன்றைய நவீன காலத்தில் இளைஞர், நானும் சிவராத்திரி விரதம் இருக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு, அவ்வப்போது குளிர் பானங்களையும், சிலபல தேநீர் மற்றும் இன்னபிற திண்பண்டங்களையும் வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு அவற்றை சுவைத்துக்கொண்டு இருப்பதுண்டு. ஆனால் இதுவல்ல விரதம் என்பது. இது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதோடு நம்முடைய விரதத்தின் பலனையே முற்றிலும் மாற்றிவிடும்.

சிவராத்திரி தினத்துக்கு முதல் நாளோ அல்லது அதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்போ நாம் நம்மை மனதளவில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த நாட்களில் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். ஏனெனில், நமக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிட்டால், பின்பு சிவராத்திரி விரத நாளில் வயிற்றுக்கு உபாதை ஏற்படலாம். அதனால் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு முன்பாகவே அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நன்று.

சிவராத்திரி நாளன்று அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து முடித்து, முடிந்தால் வீட்டில் உள்ள பூஜை அறையில் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு, சிறிது நீர் அருந்திவிட்டு, பின்பு அருகிலுள்ள சிவன் கோயில்களுக்கு சென்று சிவபெருமானை வணங்குவது நல்லது. பின்பு உச்சிக்கால நேரத்தில் குளித்து முடித்து உச்சிக்கால பூஜை நேரத்தில் கோயிலுக்கு சென்று சிவபெருமானை வணங்குவது நல்லது.

குறிப்பாக மாலை முதல் அருகிலுள்ள சிவன் கோயில்களிலேயே தங்கியிருந்து, தூங்காமல் கண்விழித்து, நான்கு வேளைகளிலும் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டு சிவபுராணம், தேவாரம், திருவாசகம், மற்றும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களையும் பாராயணம் செய்யலாம். சிவாலயங்களில் நடைபெறும் உபன்யாசங்களைக் கேட்டு மனதிற்கு புத்துணர்ச்சி ஊட்டலாம். இல்லாவிட்டால் கோயில்களில் தனியாக அமர்ந்து கண் மூடி மனதிற்குள் சிவ மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு இருக்கலாம்.

அதை விட்டுவிட்டு, சிவராத்திரி விரத முறைக்கு புறம்பான காரியத்தை செய்யக்கூடாது. அப்படி செய்தால் சிவராத்திரி விரத முறைக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். சிவராத்திரி அன்று எதையெல்லாம் நாம் செய்யக்கூடாது என்பதையும் தெரிந்து நடந்துகொள்ளலாம். சிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் கண்முழிக்க வேண்டுமே என்ற பயத்தில், பகல் பொழுதில் நாம் தூங்குவது கூடாது. அதே போல், இரவு முழுவதும் கண்முழிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் பொழுது போக்கு விஷயங்களான தாயம் விளையாடுதல், கைபேசியை நோண்டிக்கொண்டு இருப்பது, திரையரங்குகளில் திரைப்படங்கள் பார்ப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தற்போது சிவராத்திரி ஸ்பெஷல் என்ற பேரில் திரையரங்குகளிலும் சிறப்பு காட்சி என்ற பெயரில் திரைப்படம் காண்பிப்பது வேதனையானது.

கோயில்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே உபவாசம் இருப்பவர்கள் சிவராத்திரி நாளில் பக்திப் படம் பார்க்கலாம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு பக்திப்படங்களையும் பக்திப் பாடல்களையும் பார்த்து ரசிப்பதுண்டு. இதுவும் தவறான அணுகுமுறைதான். இதையும் நாம் தவிர்க்க வேண்டியது அவசியம்.கோயில்களுக்கு செல்பவர்கள் பொழுது போக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு உட்கார்ந்துகொண்டு நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை கச்சேரி நடத்துவது கிண்டலடிப்பது போன்ற தவறான செயல்களைத் தவிர்ப்பது நல்லது.

இன்றைய காலகட்டத்தில் மஹாசிவராத்திரி நாளில் அன்னதானம் கொடுப்பது புண்ணியம் என்று நினைத்துக்கொண்டு, கேசரி, தயிர் சாதம், சாம்பார் சாதம், குளிர்பானம் போன்றவற்றை தயார் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் கொடுப்பதுண்டு. அன்னதானம் கொடுப்பது புண்ணியம் தான். ஆனால் மகாசிவராத்திரி தினத்தன்று கோயில், வீடு என எங்குமே அன்னதானம் என்ற பெயரில் எதையும் கொடுக்கக்கூடாது. அப்படி செய்தால் சிவராத்திரி விரதம் இருப்பதன் பலனே கெட்டுவிடும். எனவே, சிவராத்திரி நாளில், நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்த பின்பு தரும் நிவேதனத்தை மட்டுமே நாம் வாங்கி பக்தியோடு உண்ணலாம். மற்றபடி தேவையில்லாமல் அன்னதானம் என்ற பேரில் சிவராத்திரி விரதத்தை நாம் கெடுக்கக்கூடாது.

mahasivarathiri viratham do’s and don’t important and benefits

இதையும் படிங்க: Russia-Ukraine war: ரஷிய போர் கப்பல் கேப்டனை கெட்டவார்த்தையால் திட்டிய உக்ரைன் வீரர்கள்