கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
திலீப்பின் நெருங்கிய நண்பராக இருந்த சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் அளித்த பேட்டியை தொடர்ந்து தற்போது இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. பாலச்சந்திர குமார் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், திலீப்புக்கு எதிராக திடுக்கிடும் தகவல்களை கூறியிருக்கிறார். நடிகையை மானபங்கம் செய்தபோது எடுத்த வீடியோவை நடிகர் திலீப் தனது வீட்டில் இருந்து பார்த்ததாக அவர் கூறி உள்ளார்.
இந்நிலையில் நடிகர் திலீப், அவரது சகோதரர் அனூப் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தில் கேரள காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றே போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.
நடிகர் திலீப் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக தகவல் வெளியானது. ஒரு அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாகவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வழக்கு தொடர்பாக திலீப், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜனவரி 14ம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரைக் கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: retail edible oil price dropped : சமையல் எண்ணெய் விலை குறைப்பு !