அமெரிக்க அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக ஜொலிக்கும் தமிழர்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று (நவம்பர் 3) நடைபெற்றது. இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

டெல்லியில் பிறந்த 47 வயதான கிருஷ்ணமூர்த்தி, லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை எளிதில் தோற்கடித்தார். மொத்தமாக பதிவான வாக்குகளில் ​​அவர் 71 விழுக்காடு வாக்குகளை அள்ளியுள்ளார். இவர் முதன்முதலாக 2016இல் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் பெற்றோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதேபோல், அமி பெரா கலிபோர்னியாவில் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபையில் ரோ கன்னா மூன்றாவது முறையாக தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.