பட்ஜெட் ஆலோசனையை நிறைவு செய்த நிர்மலா சீதாராமன்

வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்காக முன்னெடுப்புகளை மத்திய நிதியமைச்சகம் மேற்கொண்டுவருகிறது. அதன் முக்கிய நடவடிக்கையாக பல்வேறு துறை சார் நிபுணர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

நிதி, முதலீட்டுச்சந்தை, சுகாதாரம், கல்வி, ஊரக வளர்ச்சி, குடிநீர் மற்றும் தூய்மை, வர்த்தக சங்கம், உற்பத்தி, சேவைச் துறை, உட்கட்டமைப்பு, எரிசக்தி, வேளாண்மை, தொழில்முனைவோர், பொருளாதார நிபுணர்கள் என பலதரப்பட்ட மக்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், நிதிச்செயலர் ஏ.பி. பாண்டே, தலைமை பொருளாதார ஆலோசகர் கே. சுப்பரமணியம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை மொத்தம் 15 கூட்டங்களில் 170 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை சீரமைக்கும் விதமாக வரப்போகும் பட்ஜெட் சிறப்பு கவனத்துடன் வடிவமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.