ஜூஸ் தொழிற்சாலையில் தீ விபத்து

வங்கதேச தலைநகர் டாக்காவின் ரூப்கஞ்ச் பகுதியில் உள்ள 6 மாடி கட்டடம் ஒன்றில் ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் கீழ் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

அங்கு, ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென எரிந்து அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியது. இதனால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் உயிர் தப்பிப்பதற்காக மாடியில் இருந்து கீழே குதித்தனர். இதனால் எரளமானோருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இந்த தீ விபத்து காரணமாக 52 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 18 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 24 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதால், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்