ஊழலில் ஊறிப்போன கட்சி திமுக..!

இன்று காலை அரியலூரில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். அ.தி.மு.க. கூட்டணி திறமையான கூட்டணி வெற்றிக் கூட்டணியாகும்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் நமது கூட்டணி கட்சி தலைவர்கள் பற்றியும், என்னை பற்றியும் பொதுமக்களிடம் அவதூறு பரப்பி வருகிறார். அ.தி.மு.க. கட்சி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை பார்த்து நான் விவசாயி இல்லை, போலி விவசாயி என்று பிரசாரம் செய்கிறார். எனது தாத்தா காலத்தில் இருந்தே நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எனக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. நானும் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயிகளில் எப்படி போலி விவசாயி இருக்கமுடியும்.