கிரீஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்ட டச்சு மன்னர் !

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலக்கட்டத்தில் கட்டுப்பாடுகளை மீறி குடும்பத்தினருடன் கிரீஸ் நாட்டிற்கு விடுமுறை பயணம் மேற்கொண்டதற்கு டச்சு மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மன்னர் வில்லெம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோர் கிரீஸ் நாட்டை அடுத்த மைக்கோனோஸ் தீவிற்கு விடுமுறை பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அங்கு அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலானது. தனிநபர் இடைவெளி போன்ற கோவிட்-19 கட்டுப்பாடுகளை மீறியதாக அவர்கள் மீது அந்நாட்டு மக்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், அதற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் ராணி மாக்சிமாவுடன் இணைந்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ” கடந்த வாரம் குடும்ப விடுமுறை பயணமாக நாங்கள் கிரீஸ் நாட்டிற்கு சென்றிருந்திருக்கக் கூடாது. மக்களுக்கு இருக்கும் அதே கட்டுப்பாடுகள் தான் எங்களுக்கும் இருக்கிறது. எங்களது பயணம் பொதுவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயணம் விதிமுறைகளுக்கு உட்பட்டிருந்தாலும், நமது சமூகத்தில் புதிய கட்டுப்பாடுகளின் தாக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாதது மிகவும் விவேகமற்ற செயல் என உணர்கிறோம்.

கரோனா வைரஸை எதிர்த்துப் போராட முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு கூறும் அரசின் அறிவுறுத்தலை ஏற்போம்.

எங்கள் மீதான உங்களின் (மக்களின்) நம்பிக்கையை சிதைத்ததற்காக எங்களை முதலில் மன்னிக்கவும்.

டச்சு அரசியலமைப்பின் கீழ் மன்னரின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதமர் மார்க் ருட்டேவுக்கும், இந்த விடுமுறை பயணம் அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு டச்சு மன்னர் தேசத்திற்கு இதுபோன்ற ஒரு தவறான முன்னுதாரணமாக இருப்பது தவறு. இதனை நாங்கள் வேதனையோடு, எங்களது தவறை உணர்ந்து கூறுகிறோம்.

கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு நாங்கள் உங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்” என தெரிவித்துள்ளனர்.