6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-வது நாளாக கனமழை தொடர்ந்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மூன்றாவது நாளாக மழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரியில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது.

மழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், குமரி, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லையில் தொடர் மழை காரணமாக வள்ளியூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.