10 இடங்களில் புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும் – எடப்பாடி

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார்.

புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கொள்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 10 இடங்களில் புதிய தொழில் பூங்கா மற்றும் தொழிற்பேட்டைகளையும் முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார்.

மேலும் 28 ஆயிரத்து 53 கோடி ரூபாய் முதலீட்டில் 68 ஆயிரத்து 778 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின்றன.