Corona virus: சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

Corona virus: சென்னை ஐஐடியில் பயின்று வரும் மாணவர்கள் 3 பேருக்கு சிலதினங்களுக்கு முன்னர் லேசான கொரேனா அறிகுகள் இருந்ததால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு தொற்று உறுதியானது. வெவ்வேறு இடங்களில் இருந்து அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தொற்று உறுதியான மாணவர்களுடன் தொடர்பில் இருந்த 18 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 9 பேருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதியானது.

அதனைத் தொடர்ந்து, மேலும் 666 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை ஐஐடியில் மட்டுமே 30 பேருக்கு 3 நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லேசான பாதிப்புகள் மட்டுமே உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஐஐடி வளாகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொற்று பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிப்பதோடு, வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தினார்.

மேலும், மகாராஷ்டிரா, டெல்லி போன்று தமிழ் நாட்டிலும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதுடன், கொரோனா விமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று 39 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 24 மணி நேரத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 256 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 26 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,109 ஆக உள்ளது.

டெல்லியில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 1,009 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று 965 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த பாதிப்பிற்கு ஒமைக்ரானின் புதிய வகை மாறுபாடே காரணம் என அவிஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒமைக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2.12 வகை வைரஸே தற்போதைய தொற்று பரவலுக்கு காரணமாக இருக்கிறது.

இந்த மாறுபட்ட வகை டெல்லியில் மட்டுமின்றி தலைநகரை ஒட்டியுள்ள ஹரியானா மற்றும் உத்தரபிரதேசங்களின் மாவட்டங்களிலும் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முக கவசம் அணிவது கட்டாயம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும் 18 முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Mask in Tamil Nadu: தமிழகத்தில் “ மாஸ்க் ”அணியாவிட்டால் ரூ.500 அபராதம்..!