Dharmapuri: தங்கையை காப்பாற்றிய அண்ணன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

dharmapuri
தங்கையை காப்பாற்றிய அண்ணன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Dharmapuri: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள பைசுஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் ரஞ்சித் குமார் வயது 14. அதே பகுதியில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் தனது உறவினரின் ஈம காரிய நிகழ்வுக்காக குடும்பத்தினருடன் ஒகேனக்கல்லுக்கு சென்றார். ஒகேனக்கலில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த ரஞ்சித்குமார் மற்றும் அவரது தங்கை ஆகியோர் முதலைப்பண்ணை எதிரே உள்ள காவிரி ஆற்றில் குளித்தனர்.

அப்போது ரஞ்சித்குமாரின் தங்கை ஆழமான பகுதியில் சென்று தண்ணீரில் தத்தளித்தார். இதனைப் பார்த்த ரஞ்சித்குமார் தங்கையை காப்பாற்ற முயற்சி செய்து அவரை பத்திரமாக காப்பாற்றினார். பின்னர், ரஞ்சித்குமார் காவிரி நீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதனைக் கண்ட உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் அவர் நீரில் இழுத்துச்செல்லப்பட்டார்.

இது குறித்து ஒகேனக்கல் தீயணைப்புதுறைக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு சிறப்பு நிலை அலுவலர் ராஜா, ரஞ்சித்குமார், இளங்கோவன் உள்ளிட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் ஆற்றில் மூழ்கி ரஞ்சித்குமாரை மீட்டனர்.

உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட ரஞ்சித்குமாரை ஒகேனக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்று முதலுதவி செய்து, மேல்சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். காவிரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட தங்கையை காப்பற்ற சென்ற அண்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தருமபுரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Exam: பிஇ, பிடெக் செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு!