‘உங்க அப்பாகிட்ட கேளு’ – தேஜஸ்வி யாதவை வெளுத்து வாங்கும் நிதிஷ்குமார்

பிகார் பரப்புரை கூட்டத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், பள்ளி, கல்லூரிகள் எதையாவது உங்கள் பெற்றோர் கட்டியுள்ளனரா என்பதை அவர்களிடமே கேள் என்று தேஜஸ்வி யாதவை விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “அப்போதெல்லாம் அவர்கள் மாநிலத்திற்கு எதையும் செய்யவில்லை. ஒருவர் (லாலு) ஊழல் செய்துவிட்டு சிறைக்குச் சென்றார், அப்போது அவரது மனைவியை முதலமைச்சராக்கினார்.

இதெல்லாம் பிகாரில் தான் நடைபெற்றது. ஆனால், இப்போது எனது அரசில், யார் தவறு செய்தாலும் அவர் சிறைக்குச் செல்வது நிச்சயம்” என்றார்.

மற்றொரு பரப்புரை கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார், “அனுபவமே இல்லாத நபர்கள் எல்லாம் தாங்கள்தான் அடுத்த முதலமைச்சர் என்று கூறுகிறார்கள்” என்று தேஜஸ்வி யாதவை மறைமுகமாக விமர்சித்தார்.

முன்னதாக, பரப்புரை கூட்டம் ஒன்றில் பேசிய தேஜஸ்வி யாதவ், “நிதிஷ்குமார் உடல் ரீதியாகவும் சரி, மன ரீதியாகவும் சரி சோர்வடைந்து விட்டார். நவம்பர் 9ஆம் தேதி லாலு பிரசாத் யாதவ் சிறையிலிருந்து வெளிவருவார், அதற்கு மறுநாள் நிதிஷுக்கு பிரிவு உபசரிப்பு விழா நடத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.