Bharat Bandh: மத்திய அரசை கண்டித்து 2-வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது..!

all-india-employee-union-protest-continues-for-the-bharat-bandh
வேலைநிறுத்த போராட்டம்

Bharat Bandh: மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன.

இதன்படி முதல் நாள் போராட்டம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டம் நீடிக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை தொடர வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,. தேசிய பணமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் ஆகும்.

தமிழகத்தில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., எச்.எம்.எஸ். உள்பட 10 தொழிற்சங்கங்கள் இந்த பொதுவேலைநிறுத்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளன. காப்பீடு, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் போன்ற பொதுத்துறை ஊழியர்கள் சம்மேளனங்களும் பங்கேற்றுள்ளன.

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வங்கி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஊழியர்கள் வேலைக்கு வராததால் வங்கி பணிகள் முடங்கின. இதுபோல பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் போராட்டம் வலுவாக இருந்தது.

தமிழகத்தில் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் முடங்கியது. அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டம் நீடிக்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி அன்று மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது பின்னர் மீண்டும் பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Today Horoscope: இன்றைய ராசி பலன்