Aadi Krithigai 2025: திதிகளில் சஷ்டி, நட்சத்திரங்களில் கிருத்திகை, கிழமையில் செவ்வாய் ஆகியன முருகப்பெருமானை வழிபட்டு, அவருடைய பரிபூரண அருளை பெறுவதற்கு ஏற்ற நாட்களாகும்.
குழந்தை இல்லாதவர்கள் சஷ்டி திதியிலும், திருமண வரம் வேண்டுவோர் கிருத்திகை நட்சத்திரத்திலும், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமையிலும் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் விரைவில் கை மேல் பலன் கிடைக்கும். இந்த கிருத்திகை நட்சத்திரம் ஆடி மாதத்துடன் சேர்ந்து வரும் போது இன்னும் அதிக சிறப்பு பெறுகிறது.
ஆடி கிருத்திகை :
ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் ஏற்ற மாதமாகும். அப்படி ஆடி மாதத்தில் வரும் சிறப்பான நாட்களில் ஒன்றாகவும், முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகவும் இருப்பது ஆடிக்கிருத்திகை நாளாகும்.
வருடத்தில் மூன்று கிருத்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன. அதாவது உத்தராயண துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை. இந்த மூன்றும் முருகனுக்கு உகந்த நாட்கள் ஆகும்.
முருகப்பெருமான், செவ்வாய் கிரகத்திற்கு உரிய தெய்வம் என்பதால் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வழிபட்டால் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். அதோடு வீடு-மனை, சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.

ஆடி மாதம் தட்சிணாயன காலத்தின் துவக்க மாதம் என்பதால் முருக பக்தர்கள் பலரும் ஆடி மாத கிருத்திகையில் துவங்கி, தை மாத கிருத்திகை வரையிலான 6 மாதங்கள் வரை கிருத்திகை விரதத்தை கடைபிடிப்பார்கள்.
ஆடி கிருத்திகை வழிபாட்டு முறை :
ஆடி கிருத்திகை அன்று முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெறும்.
ஆடி கிருத்திகை அன்று விரதம் இருக்கும் பக்தர்கள், புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபட்டால் நற்பலனைப் பெறலாம்.
கந்த சஷ்டி கவசத்துடன் கந்த குரு கவசம், திருப்புகழ் படிப்பது மிகப் பெரிய புண்ணியத்தை தரும்.
பகல் முழுவதும் உப்பில்லாமல் உணவு எடுத்துக் கொண்டு, மாலையில் அருகில் உள்ள முருகப்பெருமான் கோவிலுக்கு சென்றும் விரதத்தை நிறைவு செய்யலாம்.
கிருத்திகை விரதத்தன்று கந்த சஷ்டி பாராயணம் செய்து, மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று பக்தர்களுக்கு அன்னதானம் செய்து விட்டு, பிறகு விரதத்தை நிறைவு செய்வது சிறப்பானதாகும்.
முருகனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :
திருமணத் தடை அகலும்.
செவ்வாய் தோஷம் விலகும்.
சகல செல்வங்களையும் தரும்.
குழந்தைப்பேறு கிடைக்கும்.
மனை வாங்கும் யோகம் உண்டாகும.



