பேரன் மது அருந்தியை பார்த்த தாதா உயிரிழப்பு

குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் திருப்பாகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 62) கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

நேற்று முந்தினம் இரவு சின்னசாமி டாஸ்மாக்கில் இருந்து மதுவாங்கி வந்து தனது வீட்டில் வைத்து அருந்தியுள்ளார். மது அருந்துவதற்காக முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கிவந்து சாப்பிட்டுள்ளார். இதனைக்கண்ட அவரது பேரன் ரித்திஷ் ( வயது 5) சின்னசாமி வைத்த தின்பண்டங்களை சாப்பிட வந்துள்ளார்.

சிறுவன் தின்பண்டங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்க சின்னசாமி தான் குடித்தது போக மீதி மதுவை அங்கேயே வைத்துவிட்டு டி.வி பார்க்க சென்றுள்ளார். வீட்டில் இருந்த சிறுவன் ரித்திஷின் தாயார் விஜயா உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றதால் அதனை பார்க்க வீட்டுவாசலுக்கு சென்றுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த ரித்திஷ் குளிர்பானம் என நினைத்து அவர் வைத்திருந்த மீதி மதுவை எடுத்து அருந்தியுள்ளான். மதுவுக்கு குடித்ததால் சிறுவனுக்கு இருமல் ஏற்பட்டுள்ளது.

பேரனின் இருமல் சத்தம் கேட்டு அங்கு வந்த சின்னசாமி சிறுவன் மது அருந்தியைக் கண்டு பதறிப்போனார். உடனடியாக சிறுவனின் பெற்றோரை அழைத்து தகவலை கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த விஜயா சின்னச்சாமியை கடுமையாக திட்டியுள்ளார். அந்த அதிர்ச்சியில் சின்னசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சின்னசாமியையும், சிறுவன் ரித்திஷையும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சின்னசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். சிறுவனை மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீஸாருக்கு மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலூர் போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மது குடித்து தாத்தா, பேரன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.