உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்பு..!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் ரேனி கிராமத்தில் ராணுவ வீரர்கள், 2 மருத்துவ குழுக்கள் மற்றும் பொறியியல் அதிரடி படை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டன. ராணுவ ஹெலிகாப்டர்களும் சென்றன.

தபோவன் அணையில் சிக்கியிருந்த 16 பேரை முதலில் போலீசார் மீட்டு பாதுகாப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்தோ-திபெத் எல்லை போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று முன்தினம் வரை 9 உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன என இந்தோ-திபெத் எல்லை போலீசின் இயக்குனர் ஜெனரல் எஸ்.எஸ். தேஸ்வால் கூறினார். அப்பகுதியில் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முதல் மந்திரி ராவத்திடம் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். அவரிடம், மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
உத்தரகாண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத், சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் ரேனி கிராமம் அருகே சென்று நிலைமையை கண்காணித்து சென்றார்.

இந்நிலையில், உத்தரகாண்ட் டி.ஜி.பி. அசோக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 8-ம் தேதி இரவு 8 மணிவரையில் 26 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 171 பேரை இன்னும் காணவில்லை. அவர்களில் 35 பேர் சுரங்க பாதையில் இருக்க கூடும். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என தெரிவித்தார்.