தமிழகத்தில் 2 நாளில் 2,512 ரவுடிகள் கைது

டி.ஜி.பி.சைலேந்திரபாபு இன்று காலை மதுரை வந்தார். போலீஸ் கமி‌ஷனர் அலுவலக கூட்ட அரங்கில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் தென்மண்டல போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

2 மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு டி.ஜி.பி.சைலேந்திரபாபு கூறியதாவது:-

கடந்த 2012, 2013-ம் ஆண்டுகளில் நடந்த கொலை சம்பவங்களின் தொடர்ச்சியாக நெல்லை, திண்டுக்கல்லில் பழிக்கு பழியாக கொலை சம்பவம் நடந்து உள்ளது. இதில் தொடர்புடைய சிலர் நீதிமன்றங்களில் சரண் அடைந்துள்ளனர்.

மதுரை மண்டலத்தை பொறுத்தவரை அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு, அசம்பாவிதம் தொடராத வகையில் போலீசார் சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அடுத்தபடியாக கடந்த 36 மணி நேர “ஆப்பரேசன் டிஸ் ஆர்ம்” சோதனையின்போது 16,370 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் 2,512 ரவுடிகளை கைது செய்து உள்ளோம்.

இதில் 733 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 934 கத்திகள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் 1927 ரவுடிகளிடம் இருந்து நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டு உள்ளது.

கொலை குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும் வகையில் அவர்களது செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: மனைவி குளிக்காததால் விவாகரத்து செய்ய விரும்பும் கணவன்