ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தற்போது, அந்நாட்டில் தலீபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தலீபான்களின் ஆட்சிக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. மேலும், சில கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் தலீபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபுலில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே இன்று மதியம் 2 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடைபெற்றது.
இந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த இரட்டை குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரொசன் பிரிவினர் நடத்தியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 973 பேருக்கு கொரோனா



