கும்பகோணம் பள்ளி தீ விபத்து: இன்று 17வது ஆண்டு நினைவு தினம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கு கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி தலைவாரி பூச்சூட்டி, சீருடை அணிவித்து குழந்தைகளை அனுப்பி வைத்தனர் பெற்றோர்கள்.

அன்று காலை ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நாட்டையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பள்ளியில் இருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். அந்த கொடூர சம்பவம் பெற்றோர்களை மட்டுமல்ல அனைவரது நெஞ்சையும் உலுக்கியது.

நெருக்கடியான இடத்தில் இயங்கிய பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட உடன் மாணவர்கள் வெளியேற சரியான வழி இல்லாத காரணத்தினால்தான் 94 பிஞ்சு குழந்தைகளும் தீயில் கருகி இறந்தனர். நெரிசலில் சிக்கி 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

இந்த தீவிபத்து நடைபெற்று இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்து விட்டது. பலியான குழந்தைகளின் 17-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று காலை கிருஷ்ணா பள்ளி முன்பு பெற்றோர்கள் கூடினர். அங்கு நேற்று இரவே 94 குழந்தைகளின் உருவப்படங்கள் வைக்கப்பட்டது. இன்று குழந்தைகளின் படங்களுக்கு முன் அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு வகைகள், துணிகளை வைத்தும், மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்திகளை ஏற்றி குழந்தைகளின் படங்களைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.