Ramanathaswamy Temple: 11 முகத்துடன் முருகப்பெருமான் அருளும் கோவில்

11 முகத்துடன் முருகப்பெருமான் அருளும் கோவில்
11 முகத்துடன் முருகப்பெருமான் அருளும் கோவில்

Ramanathaswamy Temple: ராமநாதபுரம் அருகே உள்ளது, குண்டுக்கரை என்ற ஊர். இங்கு சுவாமிநாத சுவாமி கோவில் இருக்கிறது.

முருகப்பெருமானுக்காக அமைந்த இந்த ஆலயத்தில், 11 தலைகளுடனும், 22 கரங்களுடனும் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப்பெருமான் இத்தலத்திற்கு வந்து தங்கியதாக தல புராணம் சொல்கிறது. இங்கு முருகப்பெருமான் விஸ்வரூப தரிசனம் தருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

ராமநாதபுரம் பகுதியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு, பாஸ்கர சேதுபதி என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் தினமும் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவிலுக்குச் சென்று, அங்குள்ள முருகப்பெருமானை வழிபடுவது வாடிக்கை. அவரது கனவில் ஒருநாள் தோன்றிய முருகப்பெருமான், தற்போது குண்டுக்கரையில் இருக்கும் முருகன் சிலையை எடுத்து விட்டு, புதியதாக ஒரு சிலையை பிரதிஷ்டை செய்யும்படியும், இதனால் இந்தப் பகுதி மக்களுக்கு நன்மை விளையும் என்றும் கூறி மறைந்தார். அதன்படியே குண்டுக்கரை சென்ற பாஸ்கர சேதுபதி, ஆலயத்தில் இருந்த பழைய முருகன் சிலையை அகற்றி, தற்போதுள்ள புதிய சிலையை நிறுவியதாக தல வரலாறு சொல்கிறது.

இதையும் படிங்க: 30 வயதுக்குள் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்

இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் முதல் தேதியில் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தில் முருகப்பெருமானைப் போலவே, துர்க்கைக்கும் பிரமாண்ட சிலை வடிக்கப்பட்டுள்ளது. 18 திருக்கரங்களுடன் அருளும் இந்த துர்க்கை தேவி, 7 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறாள். இந்த அன்னைக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறப்பு, அபிஷேக, ஆராதனைகள் செய்யப் படுகின்றன. தைப் பொங்கல் தினத்தன்று, ‘சாகம்பரி’ என்னும் அலங்காரம் செய்யப்படுகிறது. அதாவது அந்த தினம் காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் அம்பிகை காட்சி தருவாள்.

வைகாசி விசாகத்தை ஒட்டி இந்த ஆலயத்தில், பிரம்மோற்சவ விழா நடக்கிறது. சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்களும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறும் ஆலயங்களில் இதுவும் ஒன்று.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள், கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கலாம். முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிகளுக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இதையும் படிங்க: 30 வயதுக்குள் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்