IIT Madras develops ‘BharOS’: ஐஐடி மெட்ராஸ் புதிய மொபைல் ஓஎஸ் உருவாக்கம்

சென்னை: IIT Madras-incubated Firm develops Indigenous Atmanirbhar Mobile Operating System. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) தொழில் ஊக்குவிப்பு நிறுவனம், இந்தியாவில் மொபைல்போன் வைத்திருக்கும் 100 கோடிப் பேர் பயன்பெறும் வகையில் உள்நாட்டு தொழில்நுட்பத்திலான மொபைல் இயங்குதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

‘BharOS’ என்று அழைக்கப்படும் இந்த மென்பொருளை கடைகளில் விற்பனை செய்யப்படும் மொபைல்போன்களில் நிறுவ முடியும். பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதுடன், ‘ஆத்மநிர்பர் பாரத்’துக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும்.

கடுமையான தனியுரிமை, பாதுகாப்புத் தேவைகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு தற்போது BharOS சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் பயனர்கள் மொபைல்போன்களில் வரையறுக்கப்பட்ட செயலிகளில் ரகசியத் தகவல்தொடர்புகள் தேவைப்படும்போது அவற்றைக் கையாள இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்துகின்றனர். இதன் பயனர்கள் தனியார் 5ஜி நெட்வொர்க் மூலம் தனியார் கிளவுட் சேவைகளை அணுக வேண்டியிருக்கும்.

ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷனின் (IIT Madras Pravartak Technologies Foundation) தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான ஜண்ட்கே ஆபரேஷன்ஸ் லிமிடெட் (JandK Operations Private Limited -JandKops) ‘BharOS’ இயங்குதளத்தை உருவாக்கியுள்ளது. இது லாபநோக்கமற்ற நிறுவனமாக பிரிவு-8ன்படி ஐஐடி மெட்ராஸ்-ல் அமைக்கப்பட்டு உள்ளது.

ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷனுக்கு பல்துறை சார்ந்த இணையம் மற்றும் அதனைப் பயன்படுத்துவோருக்கான தேசிய இயக்கத்தின் கீழ் (National Mission on Interdisciplinary Cyber-Physical Systems -NMICPS) இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவி அளித்து வருகிறது. அத்தகைய திறன்களைக் கொண்ட சில நாடுகளுக்கு இணையாக இந்தியாவை திகழச் செய்வதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

இந்த இந்திய மொபைல் இயங்குதளம் குறித்த அறிவிப்பை செய்தியாளர் சந்திப்பில் இன்று (19 ஜனவரி 2023) வெளியிட்டுப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “BharOS Service என்பது நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மொபைல் இயங்குதளமாகும் அதிக சுதந்திரம், கட்டுப்பாடு, நெகிழ்வுத் தன்மை ஆகியவற்றைப் அளிப்பதுடன், பயனர்கள் தங்களுக்குத் தேவை எனக் கருதும் செயலியை மட்டுமே பயன்படுத்துவது என்பதில் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. பயனர்கள் தங்கள் மொபைல் சாதனங்களில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை இருப்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் திருப்புமுனையாக இந்த புதுமையான அமைப்பு அமைக்கப்பட்டு உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

பேராசிரியர் காமகோடி மேலும் கூறுகையில், “நமது நாட்டில் BharOS-ஐ ஏற்றுக் கொள்ளவும், பயன்பாட்டை அதிகரிக்கவும் மேலும் பல தனியார் தொழில் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், உத்திசார் நிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற ஐஐடி மெட்ராஸ் ஆர்வம் கொண்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

BharOS இயங்குதளத்துடன் எந்தவொரு நிலையான செயலிகளும் இருப்பதில்லை. பயனர்கள் தங்களுக்கு அறிமுகமில்லாத அல்லது நம்பிக்கை இல்லாத செயலிகளைப் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்துவதில்லை என்பதுதான் இதன் பொருள். அத்துடன் பயனர்கள் தங்கள் மொபைல் சாதனங்களில் உள்ள செயலிகளுக்கு அனுமதி அளிப்பதில் கூடுதல் கட்டுப்பாடுகளையும் வைத்திருக்க முடியும். தங்களுக்கு நம்பிக்கையான எந்தெந்த செயலிகளை அனுமதிக்கலாம், எந்தெந்த அம்சங்கள் அல்லது தரவுகளை வைத்துக் கொள்ளலாம் என்பதை பயனர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

இந்த மொபைல் இயங்குதளத்தை உருவாக்கிய புத்தாக்க நிறுவனமான ஜான்ட்கே ஆபரேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் திரு.கார்த்திக அய்யர் மேலும் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “கூடுதலாக, மொபைல் சாதனங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில் ‘நேட்டிவ் ஓவர் தி ஏர்’ (Native Over The Air) அப்டேட்களையும் BharOS வழங்கி வருகிறது. பயனர்கள் அனுமதி அளிப்பதற்குக் காத்திராமல், NOTA அப்டேட்கள் தானாகவே பதிவிறக்கம் செய்யப்பட்டு மொபைல் சாதனத்தில் நிறுவப்படுகின்றன. சமீபத்திய பாதுகாப்பு இணைப்புகள், திருத்தங்கள் போன்றவற்றுடன் மொபைல் சாதனம் எப்போதும் லேட்டஸ்ட் பதிப்புடன் இருப்பது இதன்மூலம் உறுதி செய்யப்படும். NDA, PASS மற்றும் NOTA ஆகியவற்றின் மூலம், இந்திய மொபைல் போன்கள் நம்பகமானவை என்பதை BharOS உறுதி செய்கிறது” எனக் குறிப்பிட்டார்.

அந்தந்த நிறுவனத்திற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ‘பிரைவேட் ஆப் ஸ்டோர் சர்வீஸ்’ (Private App Store Services -PASS)-ல் இருந்து நம்பகமான செயலிகளை BharOS மூலம் அணுக முடியும். நிறுவனங்களுக்கான சில பாதுகாப்பு மற்றும் தனியுரிமைத் தரநிலைகளைக் கொண்டிருக்கும் செயலிகள் குறித்த தொகுக்கப்பட்ட பட்டியலை PASS மூலம் பெறலாம். பயனர்கள் தங்கள் மொபைலில் நிறுவும் செயலிகள் பயன்படுத்தப் பாதுகாப்பானவை என்றும், சாத்தியமான பாதுகாப்பு, பாதிப்புகள் அல்லது தனியுரிமை அச்சங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு விட்டன என்றும் இதன் மூலம் உறுதியாக நம்பமுடியும்.