Erode East By Election: ஈரோட்டில் கணக்கில் வராத ரூ.4 லட்சம் பணம் பறிமுதல்

ஈரோடு: Unaccounted money of Rs 4 lakh seized in Erode. ஈரோட்டில் கணக்கில் வராத ரூ.4 லட்சம் பணம் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வருகிற பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர.

இந்நிலையில் ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக முகமது தாபிக் என்பவர் தனது காரில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரைப் பிடித்து பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர்.

அவரிடம் மூன்று லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது கணக்கில் வராத பணம் என தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்து பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதேபோல ஈரோடு எல்லை மாரியம்மன் கோயில் பகுதி அருகே தேர்தல் நிலை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து ஈரோடு நோக்கி வந்த ருத்ர சீனிவாசன் என்பவரிடம் ரூ.ஒரு லட்சம் கணக்கில் வராத பணம் கண்டறியப்பட்டது.

பின்னர் ஒரு லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 லட்சம் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் கணக்கில் வராத ஆறு லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.