Flooding in Courtalam Falls: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு

தென்காசி: Two people lost their lives in the flood at Courtalam main falls: குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக்கொண்டிருந்த பெண்கள் இருவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் குற்றால அருவிகளில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் குற்றாலத்திற்கு படையெடுத்தபடி உள்ளனர்.

அவர்கள் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி (Main falls, Five Falls, Old Courtalam, Puliyaruvi) உள்ளிட்ட அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்கிறார்கள்.

இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் கனமழை காரணமாக (Heavy Rains) நேற்று மாலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை மீட்க போராடினர். ஆனால் ஒருவரை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது.

இதனிடையே இருவர் தடுப்புகை பிடித்து வெள்ளத்திலிருந்து தப்பினர். மீதமுள்ள 2 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பாறைகளில் மோதி பலத்த காயங்களுடன் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உயிரிழந்தவ பெண்கள் இருவரின் உடலை மீட்டனர்.

மேலும் யாரேனும் சிக்கி உள்ளார்களா? என்பது குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், தற்போது சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் தென்காசி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், தற்போது, குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அருவியல் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மல்லிகா, மற்றொருவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கலாவதி என்றும் கூறப்படுகிறது.

தற்போது, இந்த சம்பவம் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதேபோல் குற்றாலம் அருவிகளில் இதற்கு முன்பு முதலுதவி சிகிச்சை மையம் (First aid treatment center) இருந்து வந்தது. ஆனால் தற்போது இல்லாத சூழலால் அவசர முதலுதவி கொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெண்கள் இருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே குற்றாலத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகள், பாதுகாப்புடனும், எச்சரிகையுடனும் அருவில் குளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.