தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணித்த அன்பில் மகேஷ், பொன்முடி

anbil-mahesh-ponmudi
தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணித்த அன்பில் மகேஷ், பொன்முடி

Educational conference: குஜராத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழகம் புறக்கணித்துள்ளது.

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி அளவில் பாட திட்டங்களை மாற்றவும் முடிவு செய்து குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது மற்றும் பாடத்திட்டம் மாற்றி அமைப்பது குறித்து இன்று மற்றும் நாளை குஜராத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நாடு முழுவதும் உள்ள கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இதில் நாடு முழுவதும் கல்வி அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் தமிழகத்தின் சார்பில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்கவில்லை. அதேபோன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளும மாநாட்டில் பங்கேற்கவில்லை.

புதிய கல்வி கொள்கை குறித்து தேசிய அளவில் பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக நடைபெறும் பணிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் பங்கேற்கவில்லை.

ஏற்கனவே தமிழக ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக முரண்பாடு நிலவிவருகிறது. அண்மையில் கூட புதிய கல்விக் கொள்கையை முழுவதும் படிக்க வேண்டும் என்றும் படிக்காமல் அதனை சிலர் எதிர்ப்பதாகவும் தமிழக ஆளுநர் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, புதிய கல்விக் கொள்கையை நன்கு படித்து தெரிந்த பிறகே அதனை எதிர்ப்பதாக கருத்து கூறியிருந்தார்.

இத்தகைய சூழ்நிலையில் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் தமிழ்நாடு குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழகம் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: LPG Cylinder: வணிக கியாஸ் சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைப்பு