புதுடெல்லி: Tamilnadu teacher who won the award in school uniform. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் இன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, 46 ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டு தேசிய நல்லாசிரியர் விருதுகளை நாட்டின் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தின்று, குடியரசுத் தலைவரால் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. கற்பித்தல் முறையில் தனிச்சிறப்புடன் விளங்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை நல்லாசிரியர் விருதை வழங்கி வருகிறது.
நாடு முழுவதிலுமிருந்து பள்ளி வருகைப் பதிவேடு, மாணவர்கள் நலனில் அக்கறை, ஆராய்ச்சிக் கட்டுரை, இடைநிற்றல் குறைபாடுகளை குறைத்தல் போன்ற புறநிலை வகை மதிப்பீடு மூலமாகவும், படைப்பாக்கம், இணை பாடத்திட்டங்களில் புத்தாக்கம், தேச வளர்ச்சிக்கான பணிகள் போன்ற செயல்திறன் மதிப்பீடு அடிப்படையிலும் நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டு விருதுக்கு, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு 3 கட்ட ஆய்வுக்குப பின் 46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி, தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இன்று நடைபெற்ற விழாவில் அவர் குடியரசுத் தலைவரிடமிருந்து விருதை பெற்றுக்கொண்டார். விழாவில், அரசுப்பள்ளி சீருடையிலேயே விருது வாங்கிய சம்பவம் காண்போர் அனைவரையும் கவர்ந்தது.
மேலும் தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அதில், “ஆசிரியர்கள் தினத்திற்கு குறிப்பாக, இளைஞர் மனங்களில் கல்வியின் சுகங்களை பரப்புகின்ற கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் நான் புகழாரம் சூட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே குடியரசுத் தலைவர் மாளிகையில், உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் திருவுருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.