1,000 முதலைகள் குஜராத்துக்கு இடமாற்றம் -தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

crocodile
1,000 முதலைகள் குஜராத்துக்கு இடமாற்றம் -தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

TN Government: மாமல்லபுரம் முதலைப் பண்ணையில் இருக்கும் 1,000 முதலைகளை குஜராத்திற்கு இடம் மாற்றம் செய்வதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஏ. விஷ்வநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மாமல்லபுரத்தில் இயங்கி வரும் முதலை பண்ணையில் கூடுதலாக இருக்கும் ஆயிரம் முதலைகளை குஜராத் மாநிலம் ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ள விலங்கியல் மறுவாழ்வு மையத்திற்கு இடமாற்றம் செய்ய மத்திய மாநில அரசு துறைகள் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

250 ஏக்கரில் சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட 79 வகையான உயிரினங்களுடன் சிறிய அளவிலான வன விலங்கு பூங்கா அமைக்க 2019ஆண்டு விண்ணப்பித்து, 2023ஆம் அண்டு ஆகஸ்ட் வரைக்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகவும், 56 முதலைகளை மட்டுமே வைக்கக்கூடிய 7300 சதுர மீட்டர் இடத்தில் 1000 முதலைகள் அடைக்கப்போவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடமாற்றம் செய்ய அனுமதியளித்தது சட்டவிரோதம் என அறிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், சட்ட விரோதமாக அனுமதியளிக்கப்பட்டதாக தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசின் வன விலங்கு காப்பாளர், மத்திய வன உயிரின ஆணையம், குஜராத்தில் உள்ள கிரீன்ஸ் வனவிலங்குகள், மீட்பு, மறுவாழ்வு மையம், மாமல்லபுரம் முதலைப் பண்ணை உள்ளிட்டோர் 3 வாரங்களில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிகளில் வெளியிட வேண்டும் – தேர்வுத்துறை அறிவுறுத்தல்