Special buses run from Chennai to Pumpa: சென்னையிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: Special buses run from Chennai to Pumpa. சென்னையிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி 16ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. இதனையொட்டி, சபரிமலையில் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் டிரோன் காமிராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக குறைவான பக்தர்களே அனுமதிகப்பட்டனர். ஆனால், இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சபரிமலை செல்வோரின் வசதிக்காக சென்னையிலிருந்து பம்பைக்கு நவம்பர் 17ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் பெரியவர்களுக்கு ரூ.1090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த அதிநவீன மிதவை சொகுசு பேருந்து சேவை வரும் ஜனவரி 18ம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பேருந்து டிக்கெட்டுகளை, www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதே போல், சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படும்.

இதேபோல் சென்னை, எழும்பூர் – கொல்லம் இடையே சபரிமலை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் மறுமார்க்கத்திலும் ரயில்கள் இயக்கப்படுகிறது.