தெருக்களின் பெயர்களில் இருந்து ஜாதியை நீக்கும் பணி தொடக்கம்

caste-street-name
தெருக்களின் பெயர்களில் இருந்து ஜாதியை நீக்கும் பணி தொடக்கம்

Singara chennai 2.0: தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் பணியை சென்னை மாநகராட்சி துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இந்த தெருக்களின் பெயர் பலகைகளை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி 8.43 கோடி ரூபாய் செலவில் தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சிங்கார சென்னை 2.0 திட்டதின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்த பெயர் பலகைகளில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த பணியுடன் சேர்த்து தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் நடவடிக்கையையும் சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக 171 வார்டில் உள்ள சாலையின் பெயரை சென்னை மாநகராட்சி மாற்றியமைத்துள்ளது.13வது மண்டலம், 171 வார்டில் உள்ள ஒரு தெருவுக்கு அப்பாவோ கிராமணி 2வது தெரு என்று பெயர் இருந்தது. இந்த பெயரை மாற்றக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி, மாநகராட்சி உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பெயரை மாற்றி சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி தற்போது இந்த தெருவின் பெயர் அப்பாவு (கி) தெரு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Tirupati Temple: திருப்பதி மலையில் 7 கி.மீ. நீள பக்தர்கள் வரிசை