Puberty function: திருவாரூரில் 600 தட்டுகளில் லாரியில் வந்த சீர்வரிசை..!

Maman-Seer-Varisai
திருவாரூரில் 600 தட்டுகளில் லாரியில் வந்த சீர்வரிசை

Puberty function: திருவாரூர் நகர பகுதியான கீழ வீதியை சேர்ந்தவர் இலைக்கடை முருகன் வயது 45. இவர் இலை கடை நடத்தி வந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு முருகன் விபத்தில் உயிரிழந்தார். இவருக்கு அட்சய ரத்னா என்கிற 13 வயது மகள் உள்ளார். அட்சய ரத்னாவின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என முருகன் ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முருகன் உயிரிழந்துவிடவே அவரது குடும்பத்தார் செய்வதறியாது திகைத்தனர். முருகனுக்கு ஆறு சகோதரிகள் உள்ளனர். தனது சகோதரரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அட்சய ரத்னாவின் மஞ்சள் நீராட்டு விழாவை திருவாரூரில் மிக பிரமாண்டமாக நடத்த வேண்டுமென முடிவு எடுத்துள்ளனர்.

அதன்படி, திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2,000 பொதுமக்களுக்கு உணவு வழங்கி, சுமார் 600 சீர்வரிசை தட்டுகள் எடுத்து அதனை திறந்த கண்டெய்னர் லாரியில் ஏற்றி செண்டை மேளம் முழங்க, வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று மஞ்சள் நீராட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாடி உள்ளனர்.

மேலும், லாரியில் முகப்பில் மறைந்த இலைக் கடை முருகனின் திருவுருவப் படமும் வைக்கப்பட்டிருந்தது. இந்த சீர்வரிசை ஊர்வலத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். சீர்வரிசை ஊர்வலம் வடக்கு வீதியில் தொடங்கி மண்டபம் இருக்கும் தெற்கு வீதி வரை நடைபெற்றது.

இதையும் படிங்க: Delhi: நீதிபதி மனைவி தூக்கிட்டு தற்கொலை