Kamal Haasan campaign: ஈரோட்டில் வரும் 19ம் தேதி கமல்ஹாசன் பிரச்சாரம்

ஈரோடு: Kamal Haasan campaign in Erode on 19th. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வரும் 19ம் தேதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்யவுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வரும் 19ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன்படி, பிப்.19ம் தேதி மாலை 5:00 மணிக்கு கருங்கல்பாளையம் காந்தி சிலையில் அவர் பிரசாரத்தைத் தொடங்குகிறார். மாலை 5.30 மணிக்கு சூரம்பட்டி நால்ரோடு, மாலை 6:00 மணியளவில் சம்பத் நகர், மாலை 6.30 மணிக்கு வீரப்பன் சத்திரம் பிரசாரம் செய்கிறார். இறுதி யாக மாலை 7:00 மணியளவில் ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் அவர் பிரசாரத்தை நிறைவு செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், கடந்த ஜன.23ம் தேதி ஈவிகேஎஸ். இளங்கோவன் நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல்ஹாசனை நேரில் சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் எனக்கு அவர் ஆதரவு தர வேண்டும். திமுக கூட்டணியில் அவர் சேர வேண்டும் என்ற எங்களுடைய விருப்பத்தை அவரிடம் கூறினேன். கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக அவர் கூறினார் என்றார்.

இதையடுத்து ஜன.25ல் மநீம செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வெற்றிக்கு நானும், எனது கட்சியும் வேண்டிய உதவிகளை செய்வோம். வாக்காளர்கள் அனைவரும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.