Issuance of permanent orders to temporary employees: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் வழங்கல்

சென்னை: Issuance of permanent orders to temporary employees in Tamil Nadu Consumer Goods Trading Corporation. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய 75 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கிடும் அடையாளமாக 2 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவந்த 586 பருவகால பட்டியல் எழுத்தர்கள், உதவுபவர்கள் (Helpers) மற்றும் பருவகால காவலர்கள் ஆகியோர் பணி நிரந்தரம் செய்யப்பட்டு பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 50 – ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கழகத்தின் பணியாளர்களை சிறப்பிக்கும் வகையில், கழகத்தின் நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் சுமைதூக்கும் பணியாளர்கள் 12,177 நபர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.1500/- வீதம் மொத்தம் 1 கோடியே 82 இலட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கிடும் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15 நபர்களுக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் வே. ராஜாராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ். பிரபாகர், இணை மேலாண்மை இயக்குநர் கே. கற்பகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.