தஞ்சாவூர்: தமிழ் நமக்கு உயிரானாலும் மற்ற மொழிகளைக் (Governor Tamilisai Soundararajan Speech) கற்கவும் மதிக்கவும் வேண்டும். மற்றொரு மொழியை கற்கும்போதுதான் தமிழ் மொழியில் உள்ள நல்லவற்றையும் மற்ற மொழிக்காரர்களுக்கு சொல்ல முடியும் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர், திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்தார். அவர் முக்கியடைந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆராதனை விழா நடைபெறும். இது போன்ற விழாக்களில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டு 176வது ஆராதனை விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேசும்போது, தமிழிசை தெலுங்கு பேசலாம். தெலுங்கு பேசும் நண்பர்கள் தமிழும் பேசலாம். இது போன்ற சூழல்கள் தமிழகத்தில் இருக்க வேண்டும். தியாக பிரம்மம் ஆந்திர மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து தெலுங்கு மற்றும் வடமொழியும் கற்றுக்ககொண்டு தமிழகத்தில் இருந்தார்.
எனவே தேசியக் கல்விக் கொள்கையில் தமிழைத் தாய்மொழியாகவும், இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும் உண்டு. தியாகபிரம்மம் தமிழகத்தில் அமர்ந்து கொண்டு தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடி உலகம் முழுவதுமுள்ள இசை ரசிகர்களை ஈர்த்தார். இதனால் மொழியின் வல்லமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நம் தமிழில் இவ்வளவு பெருமைகள் இருக்கின்றன என்பதை மற்ற மொழிக்காரர்களுக்குச் சொல்வதற்காக இன்னொரு மொழி கற்றுக்கொள்வதைத் தடுக்க வேண்டாம். இவ்வாறு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.