Electricity connection: வேளாண் திட்ட கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு

சென்னை: Electricity connection to agricultural project wells on priority basis. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021-22 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது வேளாண்நிதிநிலை அறிக்கையில் கிராம அளவில் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டும் நோக்கத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் எனும் மாபெரும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டத்தின் நோக்கங்கள் முதல்வரின் பத்தாண்டு கால தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தரிசுநிலங்களை கண்டறிந்து, பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிக்குக் கொண்டு வருவதுடன், பல்வேறு உழவர் நலன் சார்ந்த அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து கிராமங்களிலும், படிப்படியாக ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும், அதன் மூலம் தன்னிறைவையும் உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கிராமங்கள் தேர்வு
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டப்பணிகளையும் ஒருங்கே செயல்படுத்தும் வகையில், 2021-22 ஆம் ஆண்டில் 1,997 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

கிராமங்களில் தரிசு நிலத் தொகுப்பு அமைத்தல்
ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துகளிலும் 10 முதல் 15 ஏக்கர் வரை தொகுப்பாக உள்ள தரிசு நிலங்கள் கண்டறிந்து, இத்தொகுப்பில் உள்ள விவசாயிகள் அனைவரையும் குழுவாக ஒருங்கிணைத்து, தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம், 1975 ன் கீழ் பதிவு செய்யப்படுகின்றது. இதுவரை, 980 தரிசு நிலத்தொகுப்புகள் அமைக்கப்பட்டு, 705 தொகுப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தரிசுநிலத் தொகுப்பில் புதிய ஆழ்துளைக் கிணறு :
தரிசு நிலத் தொகுப்பில் சாகுபடி மேற்கொள்வதற்கு, தரிசு நிலத் தொகுப்பிலோ அல்லது அருகில் உள்ள புறம்போக்கு நிலத்திலோ நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டு, அதனடிப்படையில் ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறு அமைக்கப்படுகிறது. இதுவரை, 980 தரிசுநிலத் தொகுப்புகளில், 453 இடங்களில் ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. ஊரக வளர்ச்சித்துறை மூலம் திறந்த வெளிக் கிணறுகள் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தட்கல் முறையில் மின் இணைப்பு:
இத்திட்டத்தில் உருவாக்கப்படும் ஆழ்துளை அல்லது குழாய் அல்லது திறந்த வெளிக் கிணறுகளில் தட்கல் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 2,000 மின் இணைப்பு வழங்கப்படும். இத்தகைய மின் இணைப்பு, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் பதவியின் பெயரில் மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு தட்கல் முறையில் வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கு ஆகும் மொத்த செலவினையும் அரசே ஏற்றுக் கொள்கிறது.

மின்நுகர்வுக்கான கட்டணமும் அரசே ஏற்பு
தட்கல் முறையில் வழங்கப்படும் இம்மின் இணைப்புகளில் மின் அளவீட்டுக்கருவி பொறுத்தப்பட்டு, அதற்கான மின்நுகர்வுக் கட்டணத்தொகையையும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மைத் திட்டத்தின் கீழ், அரசே செலுத்தும்.

இரண்டாம் கட்ட திட்டச் செயல்பாடு:
2022-23 ஆம் ஆண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்திட 3,204 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு, தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.

முன்பதிவுக்கு அணுக வேண்டிய முகவரி :
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி அல்ல து www.tnagrisnet.tn.gov.in அல்லது www.tnhorticulture.tn.gov.in அல்ல து www.mis.aed.tn.gov.in இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து, கொள்ளலாம்.

பாசன வசதியின்றி தரிசாக உள்ள நிலங்களில் பாசன வசதியினை உருவாக்கி, தரிசு நிலங்களை சாகுபடிக்குக் கொண்டு வருவதற்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.