Chief Secretary Meeting: மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு: தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னை: A consultation meeting was held under the chairmanship of the Chief Secretary to provide employment opportunities to differently abled persons in private companies. மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அரசு தலைமைச் செயலர் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு உகந்த பணியிடங்களை கண்டறிவது குறித்து முதல் உயர் மட்டக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்ட 2016ன்படி சம உரிமை சம வாய்ப்பு கொள்கையினை அமல்படுத்தி அரசுக்கு அறிக்கை அளித்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், அரசு சாரா உறுப்பினர்கள் இது தொடர்பாக தனியார் நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்திட உகந்த பணியிடங்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளித்து, வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கிடலாம் எனவும், நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த தடைகளற்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, தேவையான உதவி உபகரணங்களை வழங்கி, மாற்றுத்திறனாளிகளின் திறனைக் கண்டறிந்து, அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதுதொடர்பாக அரசு தலைமை செயலர் அவர்கள் தனியார் நிறுவனங்களுடன் தொடர் கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் ஆலோசணை வழங்கினார். அதுமட்டுமின்றி இதனை அனைத்து தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களும் ஒரு தொடர் இயக்கமாக தமிழ்நாட்டிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, அரசு செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, இயக்குநர், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய அரசுத் துறைகளின் உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்து வரும் அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.