Awareness program in Dharmapuri: இல்லம் தோறும் மூவர்ணக் கொடி: தர்மபுரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தர்மபுரி: Awareness program in Dharmapuri: தருமபுரி மாவட்டம், ஏர்ரப்பட்டியில் இல்லம்தோறும் மூவர்ணக் கொடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின், மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில், தருமபுரி மாவட்டம், ஏர்ரப்பட்டியில் இந்தியாவின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா மற்றும் இல்லம்தோறும் மூவர்ணக் கொடி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று அறியப்படாத வீரர்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி பங்கேற்று, தருமபுரி மாவட்டத்தை சார்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், “தருமபுரி மாவட்டத்தில் அனைத்து இல்லங்களிலும் நாளை முதல் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நமது மூவர்ண தேசியக் கொடியை பறக்க விட வேண்டும். இந்த அற்புதமான நிகழ்வில் அனைவரும் பங்கேற்க வேண்டும். நம் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை நாம் அறிந்து கொண்டு, அவர்களைப் போற்ற வேண்டும் என்றார்.

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பதுடன், நமது நாட்டின் அறிவு சார்ந்த வளர்ச்சிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும். மாணவ மாணவிகள் நமது நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நமது தேசியக்கொடி மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், அஞ்சலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கிடைக்கிறது. இதைப் பெற்று அனைவரும் அனைத்து பகுதிகளிலும் நமது தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி வலியுறுத்தினார்.

முன்னதாக இது தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் மாணவிகள் நமது தேசியக் கொடியை ஏந்தியவாறு கிராம மக்களிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி இல்லம் தோறும் தேசியக்கொடிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சு.முனிகிருஷ்ணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் வீ. ஜான்சிராணி, கள விளம்பர அலுவலர் பிபின் எஸ் நாத், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் மு. ஷகிலா, உ. கெளரி, ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கௌரம்மாள் அரிச்சந்திரன், பொன்னரசு, கள விளம்பர உதவியாளர் மு.தியாகராஜன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினர்.

சென்னையில் ரத்த தான முகாம்:
விடுதலையின் 75-ஆம் ஆண்டு அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சுதந்திர தினத்தன்று காலை 8.30 மணியளவில் ரத்த தான முகாம் நடத்தப்பட உள்ளது.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் ரத்த வங்கியைச் சேர்ந்த மூத்த தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. தமிழ்மணி தலைமையிலான மருத்துவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஊழியர்கள், பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள், சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயா சங்கதன் அலுவலகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், இதர கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் ஊழியர்கள், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

பொதுமக்களும் ரத்த தானம் செய்ய முன்வருமாறு இந்திய தொழில்நுட்பக் கழக கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் டாக்டர் எம்.மாணிக்கசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.