சென்னை: 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை (Governor Rn Ravi Unfurled The National Flag) சாலையில் உழைப்பாளர் சிலை அருகே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்திய நாட்டின் 74வது குடியரசு தின விழா கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியகொடியை ஏற்றி வைக்கிறார். அதே போன்று ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்துகின்றனர்.
இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு சார்பாக குடியரசு தினவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் அப்பகுதியில் நடைபெற்று வருவதால், இந்தாண்டு காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் முப்படை அதிகாரிகள் வரவேற்றனர். காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்று வரவேற்றனர். இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மேடைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ராணுவ படைப்பிரிவு, கடற்படை, ராணுவம், விமானப்படை, சி.ஐ.எஸ்.ப்., சி.ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரண படை, கடலோர பாதுகாப்பு குழு, ஊர்க்காவல் படை உள்பட படைப்பிரிவினரின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.