சென்னை: ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தம்பதியின் (18 Month Old Babys Organs Donated) ஒன்றரை வயது ஆண் குழந்தை சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று தவறி கீழே விழுந்ததில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் குழந்தை மூளைச்சாவு அடைந்தது.
இதனையடுத்து பெற்றோரின் உரிய அனுமதியுடன் குழந்தையின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தானம் பெறப்பட்டன. கல்லீரல் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 மாத குழந்தைக்கும், சிறுநீரகங்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது பெண்ணுக்கும் பொருத்தப்பட்டது. முதல் முறையாக 18 மாத குழந்தையிடம் இருந்து உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.