மெல்போர்ன்: (Indian cricket Team) டி20 உலகக் கோப்பை 2022 தொடங்குவதற்கு முன், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மெல்போர்னில் உள்ள அரசு இல்லத்தில் விக்டோரியா ஆளுநர் லிண்டா டெசாவை சந்தித்தது. இந்த தகவலை பிசிசிஐ தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளதுடன், ஆளுநரின் வருகையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. இந்திய அணியின் வருகையின் படங்கள் விக்டோரியா ஆளுநரின் ட்விட்டர் கணக்கிலும் வெளியிடப்பட்டுள்ளன.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி (Indian cricket Team) ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் பாரம்பரிய எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஏற்கனவே பெர்த் மற்றும் பிரிஸ்பேனில் மொத்தம் மூன்று பயிற்சி ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்தியா, 2வது வெற்றியை பெற்று உலக கோப்பைக்கான ஆயத்தங்களை முடித்துள்ளது. பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியா அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ரோஹித் அணி, உலகக் கோப்பை போட்டிக்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
டி20 உலகக் கோப்பையின் முதல் பதிப்பின் சாம்பியனான இந்திய அணி, இந்த உலகக் கோப்பையில் குரூப் 2 இல் இடம்பிடித்துள்ளது. இந்திய அணியுடன் வங்கதேசம், நெதர்லாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே (Bangladesh, Netherlands, Pakistan, South Africa, Zimbabwe) அணிகள் குரூப்-2ல் இடம் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் குரூப்-1ல் இடம் பெற்றுள்ளன.
உலகக் கோப்பைப் போட்டியின் (World Cup Tournament) தகுதிச் சுற்றுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை முடிவடைந்தன; இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் பிரதான சுற்றுக்கு (சூப்பர்-12) தகுதி பெற்றன. இரு குழுக்களிலும் தலா ஆறு அணிகள் என மொத்தம் 12 அணிகள் சூப்பர்-12 சுற்றில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.