Omni Bus Fare Ramadoss Insists: ஆம்னி பேருந்து கட்டணம்: தி.மு.க. அரசுக்கு ராமதாஸ் புதிய யோசனை

சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை (Omni Bus Fare Ramadoss Insists) முன்னிட்டு தனியார் பேருந்து கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் ஆம்னி பேருநது கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக பல நாடுகளில் இருந்தும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். அதே போன்று சென்னையில் தென் மாவட்டங்களுக்கு பல ஆயிரம் கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதற்காக பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலை மோதுகிறது.

அதே போன்று பண்டிகை வந்து விட்டாலே ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மும்மடங்கு உயர்த்தி வாங்கப்படுவது வழக்கம். எனவே அரசே ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதிய யோசனையை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்னை டூ மதுரைக்கு இன்று பயணிக்க அதிகபட்சமாக ரூ.4999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணக் கொள்ளை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் விருப்பம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டன. கட்டணக் கொள்ளை குறித்து எவரேனும் புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என போக்குவரத்துத் துறை கூறுவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயலாகும்.

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்திருக்கிறது. அதற்கு மாறாக ஆம்னி பேருந்து சங்கங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள போக்குவரத்துத் துறை அனுமதிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

ஆம்னி பேருந்தில் பயணிப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. ஆம்னி பேருந்துகள் அதிக லாபம் ஈட்ட பொதுமக்களை கசக்கிப் பிழிய அனுமதிக்கக் கூடாது. ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். அதற்காக சட்டப்பூர்வ ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.