Vande Bharatam programme: புதுதில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கவனத்தை ஈர்த்த வந்தே பாரதம் நிகழ்ச்சி

புதுடெல்லி: புதுடெல்லி கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாக் கொண்டாட்ட அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த வந்தே பாரதம் என்ற கலாச்சார நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

புதுடெல்லியில் உள்ள கடமைப்பாதையில் இன்று நடைபெற்ற தேசிய அளவிலான குடியரசு தினக் கொண்டாட்டத்தில், கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் இடம்பெற்றிருந்த வந்தே பாரதம் என்ற கலாச்சார நிகழ்ச்சி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிகழ்ச்சிக்காக, பெண் சக்தி என்ற கருப்பொருளின் அடிப்படையில், தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டு, அதில் இருந்து 479 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட அணிவகுப்பில், கலைஞர்கள் தங்கள் தன்னிகரில்லாத் திறமைகளை வெளிப்படுத்தினர். இது, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற கொள்கையின் அடிப்படையில், இந்தியாவின் பல்வேறு கலாச்சார மற்றும் கலை பாரம்பரியத்தை வெளியிடுத்துவதாக அமைந்திருந்தது.

வந்தே பாரதம் நிகழ்ச்சிக்கு இசைஞானி இளையராஜாவின் மகள் ராஜா பவதாரணி இசையமைத்திருந்தார். அவருடன் அலோக்நந்த தாஸூம் இணைந்து, ஹிந்துஸ்தானி, கர்நாடக மற்றும் ஜாஸ் இசைகளின் உட்கூறுகளை உள்ளடக்கிய இசையை வடிவமைத்திருந்தனர்.

கடமைப்பாதையில் நடைபெற்றிருந்த இந்த அணிவகுப்பில், கலாச்சார அமைச்சகம் சார்பில், பெண் கடவுள் சக்தியை வெளிப்படுத்தும் விதமாக பிரம்மாண்ட கடவுள் உருவமும் இடம்பெற்றிருந்தது. இதில் பல்வேறு நாட்டுப்பற நடனக்கலைஞர்களின் கண்கவர் நடனமும் இடம்பெற்றிருந்தன.

இந்த வந்தே பாரதம் நடன விழாவானது, மத்திய பாதுகாப்பு மற்றும் கலாச்சார அமைச்சகங்களின் கூட்டு முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த நடனங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, உலகிற்கு வெளிப்படுத்தியதுடன், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கொள்கையை மக்களிடையே முன்னிறுத்தும் முயற்சியாகவும் அமைந்திருந்தது.

இதற்காக நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் உள்ள கலைஞர்களை அடையாளம் காண ஏதுவாக, 2022 அக்டோபர் 15ம் தேதி 2-வது கட்ட நடனப் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாநிலம், மண்டல மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 17 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட நாட்டுப்புற நடனக் கலைஞர்களுக்கு மட்டுமே இந்தமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு 2022 டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில், பிரம்மாண்ட இறுதிப் போட்டி நடத்தப்பட்டது.

Cultural Extravaganza Vande Bharatam programme remains one of star attractions at the national Republic Day celebrations at Kartavya Path in New Delhi today.