PM interact with National Awards Teachers:தேசிய விருது வென்ற ஆசிரியர்களுடன் செப். 5ம் தேதி பிரதமர் கலந்துரையாடல்

புதுடெல்லி: PM to interact with winners of National Awards to Teachers. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் செப்டம்பர் 5ம் தேதி 7, லோக் கல்யாண் மார்கில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட உள்ளார்.

தங்களது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல் தங்கள் மாணவர்களின் வாழ்வையும் வளமாக்கிய நாட்டின் தலைசிறந்த ஆசிரியர்களின் தனித்துவம் வாய்ந்த பங்களிப்பை கொண்டாடுவது, கௌரவிப்பது ஆகியவை தேசிய ஆசிரியர் விருதின் நோக்கமாகும்.

தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கான மக்களின் அங்கீகாரத்தை தேசிய ஆசிரியர் விருது அளிக்கிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இணையதளம் வாயிலாக விறுவிறுப்பாகவும் வெளிப்படைத் தன்மை வாயிலாகவும் நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகளில் நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 5ம் தேதி மங்கோலியா பயணம்:

கிழக்கு ஆசிய நாடுகளுடனான கேந்திர கூட்டுமுயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 5 முதல் 7 வரையில் அரசுமுறைப் பயணமாக மங்கோலியா செல்லவிருக்கிறார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் மங்கோலியாவிற்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும். இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கேந்திர கூட்டுமுயற்சியை மேலும் மேம்படுத்துவதற்கு இந்தப் பயணம் வழிவகை செய்யும்.

தமது பயணத்தின் போது மங்கோலியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் லெஃப்டினன்ட் ஜென்ரல் சைகான்பயருடன் திரு ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வார். மங்கோலிய அதிபர் மேதகு திரு யூ. குரெல்சுக், அந்நாட்டு நாடாளுமன்ற சபைத் தலைவர் மேதகு திரு ஜி. ஜண்டன்ஷாடர் ஆகியோரையும் திரு ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசுவார்.

இந்தியாவும் மங்கோலியாவும் கேந்திர கூட்டுமுயற்சியை பகிர்வதோடு அதில் ராணுவம் முக்கியத் தூணாக விளங்குகிறது. இருதரப்பு பேச்சு வார்த்தையின் போது இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் இந்தியா மற்றும் மங்கோலியா இடையேயான ராணுவ ஒத்துழைப்பை ஆய்வு செய்வார்கள். இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு புதிய முன்முயற்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள்.