கார்கோன் (மத்தியப் பிரதேசம்): Fire breaks out in fuel tanker; 2 dead, over 20 injured. மத்திய பிரதேசத்தில் டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம், பிஸ்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சன்கான் கிராமம் அருகே இன்று எரிபொருள் டேங்கரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எரிபொருள் டேங்கர் லாரி இந்தூரில் இருந்து கார்கோன் நோக்கி சென்று கொண்டிருந்தது. அஞ்சன்காவ்ன் கிராமம் அருகே உள்ள திருப்புமுனையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி கவிழ்ந்தது. இன்று காலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.
கர்கோன் எஸ்டிஎம் ஓம் நாராயண் சிங் கூறுகையில், கிராமத்தின் அருகே எரிபொருள் டேங்கர் கவிழ்ந்ததால், அதிலிருந்து எரிபொருளை சேகரிக்க அருகில் உள்ள கிராம மக்கள் திரண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி வெடித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கர்கோன் எம்எல்ஏ ரவி ஜோஷி கூறுகையில், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுமார் 15 பேர் இந்தூருக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும், சுமார் 10 பேர் காயமடைந்து கர்கோன் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். காயமடைந்தவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் மாநில அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், “இந்தூரில் இருந்து கார்கோன் சென்ற டேங்கர் லாரி, பிஸ்தான் காவல் நிலையத்திற்குட்பட்ட அஞ்சங்கான் அருகே கவிழ்ந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர் என்ற வருத்தமான செய்தி கிடைத்தது.
இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நிர்வாகத்தால் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உள்ளனர். கோட்ட ஆணையர் மற்றும் கலெக்டருடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.