ஞானவாபி மசூதி குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து பதிவிட்ட டெல்லி பேராசிரியர் கைது

delhi-university
ஞானவாபி மசூதி

Delhi university: டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர், ஞானவாபி மசூதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததன் காரணமாக நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக அவர் பதிவிட்ட கருத்துக்கள், மதத்தின் அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை ஊக்குவிப்பதாக உள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பெறப்பட்ட புகாரில் பேரில் நேற்றி, வரலாற்று பாட இணைப் பேராசிரியரான ரத்தன் லால்(50 வயது), வடக்கு டெல்லியின் சைபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர், லால் மீது போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- சமீபத்தில் ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்தின் மீது இழிவான மற்றும் ஆத்திரமூட்டும் வகையில் அவர் சமூக வலைதளத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். ஞானவாபி மசூதி விவகாரம் மிகவும் முக்கியமானது மற்றும் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அப்படியிருக்கும் போது, அவர் பதிவிட்ட கருத்துக்கள், மதத்தின் அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை ஊக்குவிப்பதாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, தனது சர்ச்சைக்குரிய கருத்து குறித்து பேராசிரியர் ரத்தன் லால் கூறியதாவது:- “இந்தியாவில் மட்டும் தான், நீங்கள் எதை பற்றி பேசினாலும், யாரோ அல்லது இன்னொருவரின் மத உணர்வு பாதிக்கப்பட்டு விடுகிறது. இது ஒன்றும் புதிதால்ல. ஒரு வரலாற்று பேராசிரியர் என்ற முறையில் பல்வேறு ஆய்வுகளை நான் மேற்கொண்டு இருக்கிறேன். அவற்றை குறித்து எழுதும் போது, மிகக்கவனமாக மொழிநடையை பின்பற்றி இருக்கிறேன்.

இதன்மூலம் நான் என்னை தற்காத்துக் கொள்வேன்” என ரத்தன் லால் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும்,வரலாற்று பேராசிரியர் லால், தலித் சமூகத்தினரின் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட ‘அம்பேத்கர்நாமா’ என்ற செய்தி இணையதளத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆகவும் உள்ளார்.

இதையும் படிங்க: Dog food: நாய் உணவை சாப்பிட ரூ.5 லட்சம் சம்பளம்