தமிழகத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது

தமிழகத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வு

Tamil Nadu 11th exam: தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகிறார்கள்.

தமிழ் மொழிப் பாடத்தேர்வு நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு தேர்விற்கும் இடைவெளி கொடுக்கப்பட்டு தேர்வுகள் முறையே இந்த மாதம் இறுதி வரை நடைபெறுகிறது.

இந்தநிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளை (10 ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர்.

மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்வு எழுத இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.

10, 11, 12 ஆகிய மூன்று பொதுத்தேர்வையும் 26 லட்சத்து 76 ஆயிரத்து 675 பேர் எழுதுகிறார்கள். மாற்றுத் திறனாளிகள், சிறைக் கைதிகள், மூன்றாம் பாலினத்தவர்களும் இதில் அடங்குவார்கள்.

தேர்வை கண்காணிக்க 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்களும் அமைக்கப்–பட்டுள்ளன. அரசு பொதுத்தேர்வில் எவ்வித குழப்பத்திற்கும் இடம் அளிக்காத வகையில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் பள்ளிக்கல்வித் துறை உறுதியாக உள்ளது. இதற்காக மாவட்ட அளவில் பல்வேறு ஏற்பாடுகளை கல்வி அதிகாரிகள் செய்துள்ளனர்.

11ம் வகுப்பிற்கு நாளை தமிழ் தேர்வு நடக்கிறது. 12 ந் தேதி ஆங்கிலமும், 16ந் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், பேசிக் எலக்ட்ரிக்கல், என்ஜினீயரிங், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பேசிக் சிவில் என்ஜினீயரிங், பேசிக் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், பேசிக் மெக்கானிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டெல் டெக்னாலஜி, ஆபிஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் செக்கரேட்டரிஷிப் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடக்கிறது.

19ந் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களும், 25ந் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், நியூட்ரிஷன், டெக்ஸ்டெல் மற்றும் ட்ரஸ் டிசைனிங், புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட், வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (வக்கேஷனல்) ஆகிய தேர்வுகள் நடக்கின்றன.

27ந் தேதி கம்யுனிக்கேட்டிவ் ஆங்கிலம், எத்திக்ஸ் மற்றும் இந்தியன் கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பயோகெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் ெமாழி (தமிழ்), ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல் பாடத் தேர்வுகளும், 31 ந் தேதி இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய பாடங்களுக்கான தேர்வும் நடைபெறுகிறது.

பிளஸ்2 ஆங்கில தேர்வு இன்று நடந்தது. 3 நாட்கள் இடைவெளி இருந்ததால் ஆங்கில பாடங்களை திருப்புதல் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது என்று மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Driver kills Chennai couple: மயிலாப்பூர் ஐடி கம்பெனி அதிபரை கொலை செய்தது எப்படி?