Tomato thief: தக்காளி திருடிய இளைஞர் கைது

tomato-thief
தக்காளி திருடிய இளைஞர் கைது

Tomato thief: தக்காளி விலை அதிகரித்து காணப்படும் சூழலில் சேலம் மாவட்டத்தில் தக்காளியை பெட்டியோடு திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே ஆப்பிள் பழத்தை திருடி கைதானது தெரியவந்தது.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சங்கர் (வயது 26). இவர் பெருமாகவுண்டம்பட்டி, சஞ்சீவிராய பெருமாள் கோயில் அருகே காய்கறி கடை வைத்துள்ளார். இவருக்கு தக்காளி பார்சல் இறக்குபவர்கள் 26- ம் தேதி வியாழக்கிழமை அதிகாலையில் 60 கிலோ எடையுள்ள 2 கிரேடு தக்காளி பெட்டி இறக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடை உரிமையாளர் சங்கர் காலையில் கடையைத் திறக்க வந்த போது ஒரு கிரேடு தக்காளி பெட்டி மட்டுமே வெளியே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து தக்காளி இறக்கியவரிடம் கேட்டபோது இரண்டு பெட்டி இறக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் கடையில் வைக்கப்பட்டிருந்த இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது ஒருவர் ஸ்கூட்டரில் வந்து தக்காளி பெட்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது.

வீடியோவில் டிப்டாப் இளைஞர் ஒருவர், ஸ்கூட்டரில் வந்து கடை முன்பு நின்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, தக்காளியை கிரேடுடன் எடுத்து, ஸ்கூட்டரில் கொண்டு செல்வது பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. கடை உரிமையாளர் மற்றும் தக்காளி வியாபாரிகள், தக்காளி திருடிய டிப்டாப் இளைஞரின் வீடியோவை வைத்து பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்ததோடு, இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் சங்கர், புகார் கொடுத்தார்.

இதையும் படிங்க: நெஞ்சில் கிரிக்கெட் பந்து பட்டு 11 வயது சிறுவன் மரணம்.. ராமநாதபுரத்தில் சோகம்!!

புகாரின் பேரில் எஸ். ஐ. இராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து தக்காளி திருடனை தேடிவந்தனர். இதனிடையே இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருட்டு போனதும், இதனால் சிறு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதும் தெரியவந்தது. சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த வண்டி நம்பரை வைத்து விசாரணை செய்ததில், வெண்ணந்தூர் தங்கசாலை வீதி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்ராஜ் ( வயது 32) என்பது தெரியவந்தது.

இவர் ஏற்கனவே செவ்வாய்பேட்டை பகுதியில் ஆப்பிள் பெட்டி திருடிய வழக்கில் கைதாகி ஜாமினல் வெளியே வந்த நிலையில், மகுடஞ்சாவடி காவல் நிலைய எல்லைப் பகுதியில் தக்காளி திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தக்காளி திருடிய சின்ராஜை போலீசார் கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பல்வேறு திருட்டு சம்பவங்களுக்கிடையே இளைஞர் ஒருவர் தக்காளி திருடிய வழக்கில் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Lychee fruit: லிச்சி பழத்தை கோடை காலத்தில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்