Panchayat President Killed:காஞ்சிபுரம் அருகே பஞ்சாயத்து தலைவர் ஓட ஓட வெட்டிக்கொலை

காஞ்சிபுரம்: A panchayat leader was chased to death near Kancheepuram and has created a stir.காஞ்சிபுரம் அருகே பஞ்சாயத்து தலைவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது48). இவர் அதே ஊராட்சியில் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, ராகவேந்திரா நகர் பாலம் அருகே வெங்கடேசன் சென்றபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் வெங்கடேசன் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளனர்.

உடனே அங்கிருந்து தப்பி ஓடிய வெங்கடேசனை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டிச் சென்றனர். அப்போது கத்தி, வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெங்கடேசனின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமங்கலம் போலீசார், உயிரிழந்த வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கொலை குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெங்கடேசன் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

தொழில் போட்டி காரணமாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா, அல்லது முன்விரோதம் போன்ற வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால், மாடம்பாக்கத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதையடுத்து, 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.