Girl died in Chennai: சென்னை துணிக்கடையில் இரும்பு கேட் விழுந்து சிறுமி உயிரிழப்பு

சென்னை: A girl died after an iron gate fell in a clothes shop in Chennai. சென்னையில் பிரபல துணிக்கடையில் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகர், நம்மாழ்வார் பேட்டை சிவகாமிபுரம் பரக்காசாலையை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி வாணி. இந்த தம்பதியருக்கு 6 வயதான மகள் ஹரிணி. சங்கர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹர்லிக்ஸ் சாலையில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் வாகனங்கள் ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இந்த துணிக்கடையில் வழக்கம்போல் நேற்றிரவு சங்கர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சங்கரின் மனைவி வாணி மற்றும் அவருடைய மகள் ஸ்ரீ ஹரிணி அவரை பார்ப்பதற்காக அங்கு வந்துள்ளனர்.

அப்போது வளாகத்தில் உள்ள 20 அடி அகலம் கொண்ட ஸ்லைடிங் இரும்பு கேட்டை திறக்க முற்படும்போது, அந்த கேட் சிறுமி ஸ்ரீஹரிணி மீது விழுந்துள்ளது. இதில் சிறுமியின் தலை மற்றும் உடல் முழுவதும் நசுங்கிய நிலையில் படுகாயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த இரும்பு கேட் முறையான பாதுகாப்பு அம்சம் இன்றி பொருத்தப்பட்டிருந்ததால் கேட் விழுந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஸ்ரீ ஹரிணி உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.